UPDATED : ஏப் 29, 2026 10:02 AM
ADDED : ஏப் 29, 2026 10:04 AM

பெருங்குடி:
மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக, பிரஷ்வொர்க் எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் அகாடமியில் சேர்க்கை தொடங்கியுள்ளது.
அந்நிறுவனத்தினர் கூறியதாவது:
நிறுவனம் சார்பில், தொழில் துறை தேவைக்கு ஏற்ப கணினி மொழி எனும் 'கோடிங்' பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட உள்ளது.
பொருளாதார அல்லது சமூக காரணங்களால், கல்லுாரி செல்ல முடியாதோருக்கும், கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்டோருக்கும், இலவசமாக ஓராண்டு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2, 'டிப்ளமோ' படித்தவர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தியோர், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் குடும்பத்தின் மாத வருமானம் 20,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு, திறமையின் அடிப்படையில் 'பிரஷ்வொர்க்' நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். பயிற்சி காலத்தில், மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்தாண்டு பிளஸ் 2, பட்டம் பெற்றவர்கள், இத்திட்டத்தில் சேர இயலாது. 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டோர், myfssa.freshworks.com என்ற இணையதளத்தில் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு admissions@fssa.freshworks.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

