காகிதக்கூழ் பிரிவில் இலவச தொழிற்கல்வி பட்டய படிப்பு
காகிதக்கூழ் பிரிவில் இலவச தொழிற்கல்வி பட்டய படிப்பு
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:16 AM
கரூர்:
காகிதக்கூழ் பிரிவில், இலவச தொழிற்கல்வி பட்டய படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், கூறியிருப்பாதவது:
கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ், ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய பஞ்., திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், ஐந்து பேருக்கு காகிதக்கூழ் பட்டயப்படிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் குறைந்தபட்சம், 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல்முறையிலே தேர்ச்சி பெற்றும், 1.6.24 அன்று 18 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். அந்த தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி கற்றுத்தரப்படும்.
மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லுாரிக்கு செலுத்தப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள், விண்ணப்பப் படிவங்களை கரூர் புகழூர், திருச்சி மொண்டிப்பட்டி ஆலைகளின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 10-க்குள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

