UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 10:52 AM
திருப்பூர்:
பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தேர்வு முடிவு குறித்த மதிப்பெண் சான்றிதழ், இதர ஆவணங்களை, 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு, தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் மணிவண்ணன் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, தனித்தேர்வு மையங்களில் கடந்த 2017 மார்ச் முதல், 2022 ஆகஸ்ட் வரையிலான பருவங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக வினியோக செய்யப்பட்டது.
பெற்றுக் கொள்ளாதவர்களின் சான்றிதழ்கள் மீள இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய தேர்வரால் பெறப்படாமல் இருக்கும் இதர சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளன.
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படல் வேண்டும்.
எனவே, மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், 90 நாட்களுக்குள் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
தவறினால், மேற்படி தேர்வுப் பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு, இவ்வலுவலகத்தால் உரிய நடடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.