அரசு ஊழியர்,ஆசிரியர் சம்பளத்தில் வரி பிடித்த குளறுபடி நீங்கியது அரசு ஊழியர், ஆசிரியர்கள் நிம்மதி
அரசு ஊழியர்,ஆசிரியர் சம்பளத்தில் வரி பிடித்த குளறுபடி நீங்கியது அரசு ஊழியர், ஆசிரியர்கள் நிம்மதி
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 08:58 AM

சிவகங்கை:
அரசு ஊழியர், ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்த, குளறுபடி நீங்கியதால் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை இணையதள (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) களஞ்சியம் 2.0 முகவரியில் அந்தந்த துறைகள் மூலம் பட்டியல் தயாரித்து ஏற்றுவார்கள். 2024 அக்டோபர் சம்பளத்தை ஏற்றும் போது அம்மாத சம்பளத்துடன், அகவிலைப்படி நிலுவையையும் சேர்த்து வழங்கியதால் அதற்கான வருமான வரியை பிடித்தம் செய்தனர். அதற்கு பின் நவம்பர் சம்பளத்தில் அக்.,- ல் பிடித்தம் செய்த வருமான வரி தொகையையே பிடித்தம் செய்தனர்.
இதனால், வருமான வரித்துறையில் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப பெறுவதில், 6 மாதம் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக டிச., மாதத்திற்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின், சம்பளத்திற்குரிய வருமான வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கியது சம்பள குளறுபடி
அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர், ஆசிரியருக்கான டிசம்பர் சம்பள பட்டியல் டிச., 16 ம் தேதியில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை போன்று வருமான வரியை அதிகளவில் பிடிக்காமல், அவரவர் சம்பளத்திற்கான வருமான வரியை மட்டுமே பிடிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள பிடித்தத்தில் ஏற்பட்ட குளறுபடி நீங்கியுள்ளது, என்றார்.