த.வெ.க., நிர்வாகிகளுக்கு அரசு பதவி; அரசாணைகளை வெளியிடாமல் மறைப்பு
த.வெ.க., நிர்வாகிகளுக்கு அரசு பதவி; அரசாணைகளை வெளியிடாமல் மறைப்பு
UPDATED : ஆக 03, 2026 06:20 PM
ADDED : ஆக 03, 2026 06:21 PM
சென்னை:
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு, அரசு பதவிகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான அரசாணைகள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான, த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், முதல்வரின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு, சிறப்பு அதிகாரி என்ற அரசு பணி வழங்கப்பட்டது. இதற்கான அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த அரசாணையை, தமிழக அரசு ரத்து செய்தது.
நேர்முக உதவியாளர்கள்
இதன் பின், முதல்வர் விஜயின் ஆலோசகராக, அவரது அரசியல் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், அரசு சார்பில் நியமிக்கப்பட்டனர். இந்த தகவல் மே, 5ம் தேதி வெளியானது.
இது தொடர்பான அரசாணை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. அமைச்சரவை கூட்டம் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களில், இருவரும் பங்கேற்று வருகின்றனர்.
இதே போல, முதல்வர் விஜயின் சமூகவலைதள அட்மின் ஜெகதீஷ், உதவியாளர் ராம்குமார் ஆகியோருக்கும், முதல்வரின் நேர்முக உதவியாளர்களாக பணி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அரசாணையும் வெளியாகவில்லை. நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் விஜய் அலுவலகத்தில், இந்த நான்கு பேருக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட உள்ளன.
த.வெ.க., தேர்தல் பிரசாரங்களில், விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர் பவுண்சர் நயீம் மூஸா. இவரும், முதல்வர் செல்லும் இடங்களுக்கு பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து செல்கிறார். இவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது பாதுகாப்பு போலீசாருக்கே இன்னும் தெரியவில்லை. உள்துறையிலும், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மர்மம்
இந்நிலையில், முதல்வரின் சமூகவலைதள ரசிகர் மன்ற தலைவராக இருந்த குரு, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள சமூக ஊடகப்பிரிவு சிறப்பு அதிகாரியாக, த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யாவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அரசாணைகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.
முதல்வர் விஜய் பதவி ஏற்ற போது, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வழங்குவதாக அறிவித்தார். ஆனால், அவரை சுற்றி நடக்கும் அரசு பணிகள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்த விபரம் மர்மமாகவே உள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களின் வாயை அடைப்பதற்காக, இது போன்ற நடவடிக்கைகளில் ரகசியம் காக்கப்படுவதாக கூறப்படுகிறது.
