UPDATED : ஜூன் 26, 2026 04:21 PM
ADDED : ஜூன் 26, 2026 04:22 PM
திருப்பூர்:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கினாலும், ஜூலை மற்றும் சில நேரங்களில் ஆகஸ்ட் வரை சேர்க்கை நீடிக்கிறது. இதனால், புதிதாக சேரும் மாணவர்களுக்கு பாடங்களை மீண்டும் கற்பித்தல், புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது.
குறிப்பாக நடுநிலை வகுப்புகளில் தாமதமாக சேரும் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவது சவாலாக இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பணிமாற்றம் காரணமாக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை சேர்த்துக் கொள்வது அவசியம் என்றாலும், கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாக சேர்வதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஒரு காலக்கெடு நிர்ணயித்து, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
