அரசு பள்ளி துாய்மைப் பணியாளருக்கு 5 மாதம் சம்பளம் வரல
அரசு பள்ளி துாய்மைப் பணியாளருக்கு 5 மாதம் சம்பளம் வரல
UPDATED : செப் 29, 2025 10:53 AM
ADDED : செப் 29, 2025 10:55 AM

மதுரை:
மதுரையில் அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு பி.டி.ஓ.,க்கள் இத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுவிக்க கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடக்க பள்ளிகளில் ரூ.ஆயிரம், நடுநிலையில் ரூ.2 ஆயிரம், உயர்நிலையில் ரூ.3 ஆயிரம், மேல்நிலையில் ரூ.4 ஆயிரம் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் (பி.டி.ஓ.,க்கள்) மூலம் அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கணக்கில் வழங்குகின்றனர். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை இச்சம்பளம் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மதுரையில் இத்தொகையை ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பள்ளிகளுக்கு விடுவிக்கவில்லை. இதனால் துாய்மைப் பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் சில தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தை வழங்கி வருகின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
துாய்மைப் பணியாளர்களின் குடும்பங்கள் அவர்களின் சம்பளத்தை நம்பி தான் உள்ளது. அரசு ஒதுக்கும் பணத்தை முறையாக வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது. அதை மாதந்தோறும் (மே தவிர) வழங்க வேண்டும். காலாண்டு விடுமுறைக்கு முன் சம்பளம் கிடைக்கும் என காத்திருந்தும் ஏமாற்றமே அடைந்தனர்.
கலெக்டர் முதல் சி.இ.ஓ., டி.இ.ஓ., என அதிகாரிகள் பள்ளி ஆய்வுக்கு செல்லும்போது தவறாமல் கழிப்பறையை பார்வையிடுகின்றனர். சுத்தமாக இல்லையென்றால் தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அளிக்கின்றனர். நல்ல விஷயம் தான். அதேநேரம் அதை சுத்தப்படுத்தும் துாய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் அளிக்கப்படுகிறதா, ஏன் 5 மாதங்கள் வழங்காமல் உள்ளனர் என ஒருவரும் கேட்பதில்லை.
எல்லா இடங்களிலும் துாய்மைப் பணியாளர்கள் சம்பள பிரச்னை அடிக்கடி எழுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில், நிலுவையுடன் சம்பளத்தை வழங்க கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.