இம்மாத இறுதிவரை அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை கட்டாயம்
இம்மாத இறுதிவரை அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகை கட்டாயம்
UPDATED : ஏப் 25, 2025 12:00 AM
ADDED : ஏப் 25, 2025 10:48 AM

 திருவாலங்காடு: 
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி கல்வி மாவட்டங்களில், 800க்கும் மேற்பட்ட துவக்க பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தொடக்க கல்வித் துறையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், வரும் 30ம் தேதி வரை பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி துறையின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் குறித்து, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை அனுப்பிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த 11ம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன.
அதேபோல, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த 17ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்தன. ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தன.
ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி, வகுப்புகள் வாரியாக தேர்வுகள் முடிந்த பின், அந்த மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணி, அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக, வரும் 30ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வருகை தர வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

