கவர்னர் - தமிழக அரசு மோதல் உயர் கல்வியை பாதிக்க கூடாது; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
கவர்னர் - தமிழக அரசு மோதல் உயர் கல்வியை பாதிக்க கூடாது; பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 12:05 PM
திண்டிவனம்:
கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் மோதலால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக்கூடாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் உயர்கல்வியை பாதிக்கக் கூடாது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட 7 பல்கலை கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக் கழகங்களில், 11 பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும் நிலை உள்ளது.
துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால் பட்டம் முடித்தவர்களுக்கு அவர்களின் கையெழுத்தில்லாமல் சான்றிதழ் கொடுக்க முடியாது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் முடிவுகள் வெளியானது. ஆனால், இதுவரை, பணி நியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் கிடப்பில் உள்ளது.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என காங்., தேசிய தலைமை வலியுறுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தடையாணை பெறவேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் முதலீட்டை திரும்ப பெற்ற சுங்கச் சாவடிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மலை மீது ஆடு பலியிடுவது தொடர்பான ஆதாரங்களை தர்க்கா தரப்பினரும், இந்து சமய அறநிலைய துறையினரும் நீதிமன்றத்தை அணுகி, தீர்வு காணலாம்.
இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.