1000 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை
1000 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை
UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 11:57 PM
ராமநாதபுரம்:
தமிழகம் முழுவதும் 1000 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தனியார் கல்வி நிறுவனங்களின் அசோசியேஷன் தலைவர் அரசகுமார் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த தனியார் பள்ளிகளின் அசோசியோஷன் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் வாசன் தலைமை வகித்தார். முகமது தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சேகர், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி பள்ளி முதல்வர் சோமசுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில தலைவர் அரசகுமார் பேசியதாவது:
கல்வித்துறை சார்பில் சென்னையில் ஆக.,4ல் தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 60 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகள், சுய நிதிப்பள்ளிகளில் படிக்கின்றனர். 3 லட்சம் ஆசிரியர்கள் பட்டய பயிற்சி, கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி பெற்று, நெட், சிலெட் என பல்வேறு தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கல்வித்திறன் சமூகத்திற்கு பயன்படும் வகையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆயா முதல் காவலர், டிரைவர், உதவியாளர், பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 2 லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
கல்விப்பணியில் 13 ஆயிரத்து 996 தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து 1000 பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. 3 வகுப்பறைகள் இருந்தால் போதுமானது. 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

