UPDATED : பிப் 14, 2026 11:12 AM
ADDED : பிப் 14, 2026 11:13 AM
சென்னை:
நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, 'குரூப் - 2, 2ஏ' தேர்வு ரத்து விவகாரத்தில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள் ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு துறைகளில், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், என, பல்வேறு குரூப் - 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்கள் உள்ளன.
இதற்கான முதன்மை தேர்வு, கடந்த 8ம் தேதி, தமிழகம் முழுதும், 38 மையங்களில் நடக்க இருந்தது. சென்னையில் தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த குளறுபடிக்கு, தொழில்நுட்ப கோளாறு காரணம் என, டி.என்.பி.எஸ்.சி., விளக்கம் அளித்தது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில், தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக, ஆறு அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கை:
கடந்த 8ம் தேதி நடைபெற இருந்த, குரூப் - 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன. ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், இரண்டு உதவி பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள், ஒரு சார் செயலர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், இத்தகைய தவறுகள் நிகழாத வகையில், கூடுதலான வழிமுறைகள் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

