நீட் தேர்வு மைய சிசிடிவி பதிவுகளை கேட்கிறது ஐகோர்ட்
நீட் தேர்வு மைய சிசிடிவி பதிவுகளை கேட்கிறது ஐகோர்ட்
UPDATED : ஜூன் 11, 2025 12:00 AM
ADDED : ஜூன் 11, 2025 10:46 AM

சென்னை:
மறு தேர்வு கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு மையத்தின் 'சிசிடிவி' காட்சிகளை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.,- பி.டி.எஸ்., உள்ளிட்டவற்றில் சேருவதற்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது.
தேர்வு நாளன்று, சென்னையில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.ஆவடி, மீனம்பாக்கத்தில் உள்ள மையங்களில் எழுதிய மாணவர்களில், 16 பேர், மின் தடையால் தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேசிய தேர்வு முகமை நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது. அதில் இருந்து விலக, இந்த நீதிமன்றம் எந்த காரணத்தையும் கண்டறியவில்லை. தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்' என கூறி, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மாணவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
