கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
UPDATED : ஜன 06, 2026 06:57 PM
ADDED : ஜன 06, 2026 06:58 PM
கூடலூர்:
கூடலூர் அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த, கவுரவ விரிவுரையாளர்களை வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம் என, கூறியதால், வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 70 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரியில் பணியிடம் கூடுதலாக இருப்பதாக கூறி, இவர்களில்,7 பேரை நேற்று வருகை பதிவேட்டில் கையெழுத் திட வேண்டாம், என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஏழு மாதமாக சம்பளமும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த, 55 கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தை ஈடுபட்டவர்களை கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் நேரில் சந்தித்து பிரச்னை குறித்து கேட்டறிந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இவர்களின கோரிக்கைக்கு தீர்வு காண வலியுறுத்தினார்.
கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:
'கல்லூரியில், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம்.
தற்போது, 50 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இங்கு பணியாற்றி வந்த, 7 பேரை வருகை பதிவேட்டில் கையெழுத்து இட வேண்டாம் என தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளனர்.
இந்த உத்தரவை திரும்ப பெறுவதுடன் இவர்களுக்கு மீண்டும் இக்கல்லூரியில் பணி, நிலுவை சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்,' என்றனர்.
கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
'கூடுதல் பணியாக கருதப்பட்ட இவர்களுக்கு, 7 மாதத்திற்கு முன்பே, கடிதம் கொடுத்து பணியில் இருந்து விடுவித்து, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிகள் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதனை ஏற்க மறுத்தனர்.
மேலும், அவர்கள் கேட்டு கொண்டதால் தனியாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கு சம்பளம் வரவில்லை. இதனால், வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம் என கூறியதுடன், கடிதம் கொடுத்து, பணியில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக பணிகள் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது,' எனக் கூறப்பட்டது.

