கல்வி முறையை மேம்படுத்துவது அனைவரின் கடமை: கவர்னர்
கல்வி முறையை மேம்படுத்துவது அனைவரின் கடமை: கவர்னர்
UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 08:44 PM
பெங்களூரு:
கல்வி முறையை மேம்படுத்துவது நம் அனைவரின் கடமை. இதனால் உலகிற்கு புதிய மாற்றத்தை தருவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நல்லது, என கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று என்.ஏ.ஏ.சி., எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் வாரியத்தின் 30ம் ஆண்டு விழாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்து பேசியதாவது:
நாட்டில், 1,700க்கும் மேற்பட்ட பல்லைக்கழகங்கள், 45,000 கல்லுாரிகளுடன், இந்திய உயர்கல்வி அமைப்பு, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, பொது மற்றும் தனியார் மூலம், இந்த அமைப்பை கணிசமாக விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நீங்கள் சமூகத்தை மாற்ற விரும்பினால், கல்வி முறையை மாற்றவும் என்று மஹாத்மா காந்தி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க, உயர்கல்வி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்காக, தயாரிக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை - 2020 நடப்பு 21ம் நுாற்றாண்டின் முதல் கல்வி கொள்கையாகும். நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்த, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதே, இதன் நோக்கம். உயர் கல்வி துறையில் தரத்தை கடைபிடிப்பது என பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
கல்வி முறையை மேம்படுத்துவது நம் அனைவரின் கடமை. இதனால் உலகிற்கு புதிய மாற்றத்தை தருவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நல்லது.
பண்டைய காலங்களில் இருந்து வானியல் முதல் புவியியல், கணிதம், மருத்துவம் மற்றும் பல துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு முழு உலகிற்கும் முக்கியமானது. நாளந்தா, தக் ஷஷீலா, விக்ரமஷிலா போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன. இந்த கல்வி நிறுவனங்களில் படிக்க, உலகம் முழுதும் இருந்தும் மாணவர்கள் வந்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.