இ.எஸ்., செயற்கை நுண்ணறிவு புதுமை மையம் துவக்க விழா
இ.எஸ்., செயற்கை நுண்ணறிவு புதுமை மையம் துவக்க விழா
UPDATED : மார் 19, 2026 07:06 PM
ADDED : மார் 19, 2026 07:10 PM
விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'இ.எஸ்., செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம்' துவக்க விழா நடைபெற்றது.
இந்த மையம் இ.எஸ்.எஸ்.எம்., இனோவேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தோடு இணைந்து துவங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் திறன் பயிற்சி அளிப்பதோடு, புதுமை, திறன் மேம்பாடு, நிஜ வாழ்க்கை தேவைகளுக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்கும் செயல்முறை தளமாக விளங்குவதாகும்.
இந்த கல்லுாரி, இங்கு முதன்மை தொழிலாக விளங்கும் வேளாண்மையை ஆதரிக்கும் வகையிலான செயலிகள், தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
வரும் 2028ம் ஆண்டிற்குள் இக்கல்லுாரிக்கென தனித்துவமான ஏ.ஐ., எஞ்சின் ஒன்றை உருவாக்கும் இலக்கையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, நடந்த விழாவில், அமெரிக்கா எஸ்.கே.சி., ஐ.டி., சொல்யூசன்ஸ் நிறுவன இயக்குனர் வெங்கடநாகமுரளி கோனடம் பங்கேற்று, 'செயற்கை நுண்ணறிவே தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம்' தலைப்பில் பேசினார்.
முன்னதாக, கல்லுாரி தலைவர் செல்வமணி, செயற்கை நுண்ணறிவு துறையில் திறன் மேம்பாடு பெறுவதன் அவசியம், அந்த துறையில் நிபுணர்களாக உருவாக விரும்பும் மாணவர்களுக்கு தொடர்பு திறனும் அதே அளவு முக்கியம். தொழில்நுட்ப அறிவு மட்டும் போதாது.
தங்களின் கருத்துகளை தெளிவாகவும், தன்னம்பிக்கையோடும் வெளிப்படுத்தும் திறனும் மாணவர்களிடம் இருக்க வேண்டும் என கூறினார்.
முதல்வர் இந்திரா முன்னிலை வகித்தார். ஏழுமலை பாலிடெக்னிக் முதல்வர் அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில் முருகன் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
