UPDATED : ஜன 31, 2025 12:00 AM
ADDED : ஜன 31, 2025 01:43 PM

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1326 அரசு பள்ளிகள், 266 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 மத்திய அரசு பள்ளியும் செயல்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் சிலர் பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் வந்து விட்டு குடும்ப சூழ்நிலை, வெளியூருக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பள்ளி படிப்பை விட்டு இடை நிற்கின்றனர்.
பல மாணவர்கள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தால் பள்ளிப்படிப்பை தியாகம் செய்து கூலி வேலைகளுக்கு சென்று தங்கள் எதிர்காலத்தை தொலைக்கின்றனர். சில மாணவர்களின் பெற்றோர் படிப்பை முக்கியமாக கருதாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மற்றவர்கள் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு புத்திகூறி பள்ளிக்கு திரும்ப அனுப்புகின்றனர்.
தற்போது பல காரணங்களால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்த நிலையில் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் பெயரளவிற்கு கூட இடைநிற்கும் மாணவர்களை தேடி செல்வதும் இல்லை. அவர்கள் நிலை குறித்து சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்திடம் கேட்பதும் இல்லை. இதுபோன்ற கவனிப்பில்லா நிலையால் ஏழை மாணவர்கள் பலர் கல்வி கனியை பறிக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர்.
மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் படித்து பாதியில் இடைநின்ற மாணவர்களின் விபரங்களை கல்வித்துறை அதிகாரிகள் சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம்தான் இப்பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.