ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ - ஜியோ முடிவு
ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ - ஜியோ முடிவு
UPDATED : டிச 08, 2025 07:08 PM
ADDED : டிச 08, 2025 07:09 PM
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 6ம் தேதி முதல் கால வரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டோ - ஜியோவின், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம், நேற்று முன்தினம் திருச்சியில் நடந்தது.
இதில், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான, பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, 15ம் தேதி முதல் 19 வரை, வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்வது, 27ம் தேதி மாவட்ட தலைநகரங்களில், காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த மாநாடு நடத்துவது; ஜனவரி, 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்குவது என, முடிவு செய்யப்பட்டது.

