இந்தியாவின் ஏ.ஐ., வளர்ச்சி அபரிமிதமானது: அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவின் ஏ.ஐ., வளர்ச்சி அபரிமிதமானது: அஸ்வினி வைஷ்ணவ்
UPDATED : ஜன 22, 2026 11:09 AM
ADDED : ஜன 22, 2026 11:12 AM

டாவோஸ்:
“ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. அந்த தொழில்நுட்பத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் எந்தவொரு நாடுடனும் இந்தியாவை ஒப்பிட வேண்டாம். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கணிப்பு தவறானது,” என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உலகளாவிய தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய, ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, “ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உலக நாடுகள் தற்போது கண்கூடாக பார்த்து வருகின்றன.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனினும், ஏழை நாடுகளும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளும் ஏ.ஐ., தொழில் நுட்ப போட்டியில் மிகவும் பின் தங்கி இருக்கின்றன,” என்றார்.
கைகோர்க்க வேண்டும்
அப்போது குறுக்கிட்ட சர்வதேச நிதியத்தின் மற்றொரு பிரதிநிதி, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடு இந்தியா. ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் மிளிர்ந்து வருகிறது.
அதே சமயம், அத்துறையின் வளர்ச்சியில் இரண்டாம் நிலையில் இருக்கும் நாடுகளுடன் தான் இந்தியாவை ஒப்பிட முடியும். எனவே, முதல் நிலைக்கு முன்னேற வேண்டுமெனில், அந்நாடுகள் அமெரிக்கா அல்லது சீனாவுடன் கைகோர்க்க வேண்டும்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்தியாவை எந்தவொரு இரண்டாம் நிலை நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஏனெனில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக அத்துறையில் இந்தியாவின் அணுகுமுறை பரந்து விரிந்தது.
நல்ல முன்னேற்றம்
ஏ.ஐ., கட்டமைப்பு மொத்தம் ஐந்து உட்பிரிவுகளை கொண்டது. அந்த ஐந்து உட்பிரிவுகளிலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
எனவே, இந்தியாவை பற்றிய சர்வதேச நிதியத்தின் கணிப்பு தவறானது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளுடன் தான் இந்தியாவை ஒப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்திற்கு இடையே, பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஆகி யோரையும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
'ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலியான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் இருந்து சமூக ஊடக பயனாளர்களை பாதுகாக்க வேண்டும்' என, 'மெட்டா' நிறுவனத் தின் சர்வதேச விவகாரங்களின் தலைமை அதிகாரி ஜோயல் கப்லானை சந்தித்து அவர் வலியுறுத்தினார்.

