ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளி வல்லுனருக்கு உயர் பதவி
ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளி வல்லுனருக்கு உயர் பதவி
UPDATED : டிச 03, 2025 08:35 PM
ADDED : டிச 03, 2025 08:41 PM
வாஷிங்டன்:
'ஆப்பிள்' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு எனப்படும் ஏஐ துறையின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமணியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தப் பதவியில் இருக்கும் ஜான் கியானாண்ட்ரியா ஓய்வு பெற உள்ளதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு அமர் சுப்ரமணியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமர் சுப்ரமணியா, இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ துறையின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். அதற்கு முன்னர், கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகளாக கூகுள் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் துறையின் பொறியியல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.
யார் இவர்
ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல்(Machine Learning) துறைகளில் அனுபவம் வாய்ந்தவரான இவர், கடந்த 1997 - 2001 ல் பெங்களூரு பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றார். 2009ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலையில் பிஎச்டி முடித்தார்.
2001 வரை ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். 10 மாதங்கள் கழித்து ராஜினாமா செய்துவிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கும் ஓராண்டு காலம் பணியாற்றிய இவர் பிறகு 2009ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
அங்கு, 8 ஆண்டுகள் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றிய இவர், கூகுள் ஜெமினியின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.2025 ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ பிரிவு கார்ப்பரேட் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களில் ஏஐ நீண்ட காலமாக முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது. அமர் சுப்ரமணியாவை வரவேற்பதிலும், அவரது அசாதாரண ஏஐ நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனத்துக்கு கொண்டு வருவதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆப்பிள் தொண்டு நிறுவனத்தின் மாதிரிகள், இயந்திரக் கற்றல் ஆராய்ச்சி, ஏஐ பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அவர் தலைமை ஏற்று நடத்துவார். ஏஐ மற்றும் இயந்திரக் கற்றலில் அவருக்கு உள்ள நிபுணத்துவம், ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய கண்டுபிடிப்பு மற்றும் எதிர்கால ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

