தினமும் இனி 9.15 மணி நேரம் பணி: ஊழியர்களுக்கு இன்போசிஸ் திடீர் உத்தரவு
தினமும் இனி 9.15 மணி நேரம் பணி: ஊழியர்களுக்கு இன்போசிஸ் திடீர் உத்தரவு
UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 05:37 PM
பெங்களூரு:
ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்று அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்து இருந்தார். அவரின் இத்தகைய கருத்துக்கு இருவேறு விதமான விமர்சனங்கள் சமூக வலை தளங்களில் எழுந்தன.
இந்நிலையில், இன்போசிஸ் ஊழியர்கள் நாள்தோறும் (வாரத்தில் 5 பணி நாட்கள்) 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தொலைதூரங்களில் அதாவது வீடுகளில் இருந்து பணிபுரிபவர்களும் 9.15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சலை இன்போசிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பி உள்ளது. பணி நேரம் இனி கண்காணிக்கப்படும், மாதத்தின் இறுதியில் அந்த விவரங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை கூறி உள்ளது.