கல்வி நிறுவனங்களில் உள் புகார் குழு கப்சிப்; ஒரு கூட்டம் கூட நடத்தாதது அம்பலம்
கல்வி நிறுவனங்களில் உள் புகார் குழு கப்சிப்; ஒரு கூட்டம் கூட நடத்தாதது அம்பலம்
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 06:17 PM

கோவை;
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், பாலியல் அத்துமீறல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உள் புகார் குழு, செயல்பாடற்று கிடப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.
பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம், 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பாலியல் அத்துமீறல் குறித்த புகார்களை விசாரிக்க, உள் புகார் குழு (ஐ.சி.சி.,) அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவின் தலைவர் ஒரு பெண், உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும். இந்நிலையில், கோவையில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், புகார்களை விசாரிக்கும் உள் புகார் குழு செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழிப்புணர்வு ஏற்படும்!
மறுமலர்ச்சி மக்கள் இயக்க(கோவை) ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
உள் புகார் குழு செயல்பாடு குறித்து அறிய, தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்.டி.ஐ.,) வாயிலாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கேள்வி எழுப்பினேன். கோவையில் கிடைத்த தகவல்கள் உள் புகார் குழுவின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதை காட்டுகிறது.
நான் கேட்ட கேள்விகளுக்கு மிக குறைந்த பதிலே கிடைத்துள்ளன. கோவை மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. இதில், 222 பள்ளிகளில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தது. சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, ஒரு பதில்கூட வரவில்லை.
மாவட்டத்தில், 400 கல்லுாரிகள் உள்ளன. ஆனால், ஐந்து கல்லுாரிகளில் இருந்துதான் பதில் கிடைத்தது. அதில், நான்கு கல்லுாரிகளில் உள் புகார் குழு கூட்டமே நடத்தப்படவில்லை.
ஒரு அரசுக் கல்லுாரியில், எந்த புகாருமே வராததால் கூட்டமே நடத்தவில்லை என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மாணவியரை அழைத்து, கூட்டம் நடத்தினால் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும். தவறான சிந்தனையுடைய ஆசிரியர்களுக்கு, அக்கூட்டம் எச்சரிக்கையாக இருக்கும். பாலியல் அத்துமீறல்களை தடுக்க அமைப்பு முறையை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. இதில், 222 பள்ளிகளில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தது. சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, ஒரு பதில்கூட வரவில்லை.
மாவட்டத்தில், 400 கல்லுாரிகள் உள்ளன. ஆனால், ஐந்து கல்லுாரிகளில் இருந்துதான் பதில் கிடைத்தது. அதில், நான்கு கல்லுாரிகளில் உள் புகார் குழு கூட்டமே நடத்தப்படவில்லை.
கல்வி அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு, ஐந்து பாலியல் சம்பவங்கள் நடந்து விட்டன. இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருக்க, தமிழக பள்ளிக் கல்வி, உயர்கல்வி அமைச்சர் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என தெரியவில்லை. கோவையில் வட்டார கல்வி அலுவலர் ஒருவருக்கு, இதுபற்றி தெரியவில்லை. பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கே இதுபற்றி தெரியவில்லை.அந்த அளவுக்கு உள் புகார் குழு செயல்பட்டு வருகிறது, என்றார் ஈஸ்வரன்.

