UPDATED : பிப் 24, 2026 11:19 AM
ADDED : பிப் 24, 2026 11:21 AM
மதுரை:
மதுரை அன்னை தெரசா பல்கலையில், 'உலகமும் தமிழரும் தமிழும்' தலைப்பில் நடக்கும் பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க விழா நடந்தது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் முன்னிலை வகித்தார்.
பர்வீன் சுல்தானா பேசுகையில், 'தமிழருக்கான பண்பாடு யாருக்கும் புரிவதில்லை. தமிழ் மொழியை கற்றால் மட்டுமே தமிழ் மரபு, பண்பாட்டை புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்கள் இந்த பூமி பந்தின் பூர்வக் குடிகள் என ஓஷோ குறிப்பிடுகிறார். பன்னாட்டு தமிழ் கருத்தரங்கங்கள் மூலம், தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறோம்,' என்றார்.
சிறப்பு அமர்வுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்ற கட்டுரையாளர்கள் இணைய வழியில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பல்கலை துணைவேந்தர் கலா, தஞ்சாவூர் பாரத் கல்விக் குழும தலைவர் புனிதா பங்கேற்றனர். சங்க ஆய்வு வளமையர் ஜான்சி ராணி, ஆய்வறிஞர் சோமசுந்தரி ஏற்பாடு செய்தனர்.

