UPDATED : மே 13, 2026 03:26 PM
ADDED : மே 13, 2026 03:27 PM
திருப்பூர்:
பொதுத் தேர்வில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதாமல் தவிர்த்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்துக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சலுகையை பயன்படுத்திய பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் மொழிப் பாடத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்காதது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பின்னால் 'கற்றல் குறைபாடு சலுகை' தவறாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உடல் மற்றும் மன ரீதியாக இயல்பாக இருந்தும், கற்கும் திறனில் மட்டும் சவால்களைச் சந்திக்கும் மாணவர்களுக்குக் கல்வித்துறை சில சலுகைகளை வழங்குகிறது. தமிழ் அல்லது ஆங்கிலம், இதில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
தேர்வெழுத ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். கணிதப் பாடத் தேர்விற்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி, குறிப்பாக ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதாமல் தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
கற்றல் குறைபாடு என்பது நோயல்ல, அது ஒரு தற்காலிகச் சவாலே. ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் அந்த மாணவர்களால் எளிதாகத் தேர்ச்சி பெற முடியும். ஆனால், சிரமத்தைத் தவிர்க்கப் பள்ளிகள் கற்றல் குறைபாடு சலுகையை நாடுகின்றன.
தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம், 100 சதவீதம் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மந்தமாகப் படிக்கும் மாணவர்களை 'கற்றல் குறைபாடு' உள்ளவர்களாக காட்டி, அவர்களை மொழிப்பாடத் தேர்வில் இருந்து பள்ளிகள் விலக்கு பெறச் செய்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, மாவட்ட வாரியாக, மொழிப்பாடங்களில் விலக்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தப் பள்ளிகளின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும்.
சலுகை பெற்ற மாணவர்கள் உண்மையில் கற்றல் குறைபாடு உடையவர்களா அல்லது பள்ளிகளின் வற்புறுத்தலால் இச்சலுகை பெறப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்குப் பாடவிலக்கு அளிப்பதை விட, அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த வேண்டும்.
தாய்மொழிப் பாடத்தைத் தவிர்ப்பது, வருங்காலத்தில் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மொழித் திறனைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
