அரசு கல்லுாரி புதிய கட்டடம் மேலுாரில் கட்டினால் பயன்
அரசு கல்லுாரி புதிய கட்டடம் மேலுாரில் கட்டினால் பயன்
UPDATED : ஜூன் 26, 2025 12:00 AM
ADDED : ஜூன் 26, 2025 08:54 AM
குன்னுார்:
குன்னுார் தொகுதிக்கு உட்பட்ட மேலுார் உள்ளிட்ட கிராம பகுதிகளில், புதிய அரசு கலை கல்லுாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் அரசு கலை கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில், பந்துமை பகுதியில், தற்போது புதிய அரசு கலை கல்லுாரியை அமைக்க, அரசு கொறடா ராமச்சந்திரன், எம்.பி., ராஜா உட்பட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து, அமைச்சர்; மாநில முதல்வர் வரை மனு சென்றுள்ளது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், குன்னுார் தொகுதியில் தோட்டங்கள், கிராம பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும்.
எனவே, குன்னுார் தொகுதிக்குட்பட்ட, மாணவர்கள் குறைவாக உள்ள, பள்ளி வளாகம், வகுப்பறைகள் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட மஞ்சகம்பை உயர்நிலைப் பள்ளி, மேலுார் ஒசட்டி, அதிகரட்டி அரசு பள்ளிகள் மற்றும் சேலாஸ், மேலுார் கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல்லுாரி அமைத்தால், மாணவ, மாணவியருக்கும் பயனுள்ளதாக அமையும். இது தொடர்பாக உயர் கல்வி துறை அமைச்சர், செயலருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.