UPDATED : டிச 11, 2024 12:00 AM
ADDED : டிச 11, 2024 06:40 PM
விசாகப்பட்டினம்:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும், ககன்யான் கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்துகிறது. இதற்காக, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளனர்.
இந்த வீரர்களை ககன்யானின் க்ரூ மாட்யூல் கலம் சுமந்து செல்லும். மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்த பின், இந்த கலம் பூமிக்கு திரும்பி கடலில் வந்து விழும். க்ரூ மாட்யூல் கடலில் இறங்கியவுடன், வீரர்களை விரைவாக மீட்டெடுப்பது அவசியம்.
இதற்கான சோதனை நேற்று விசாகப்பட்டினம் கடலில் நடந்தது. ராக்கெட் வாயிலாக க்ரூ மாட்யூல் 15 கி.மீ., உயரத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டது.
பூமியை நெருங்குவதற்கு சில கி.மீ.,க்கு முன் அதன் பாராசூட்கள் இயங்கி, மெதுவாக கடல் பரப்பில் இறங்கி மிதந்தது. உடனடியாக கிழக்கு கடற்படையின் கப்பலில் இருந்து சென்ற வீரர்கள், க்ரூ மாட்யூல் கலத்தை மீட்டு பத்திரமாக கப்பலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.