UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM
ADDED : ஜூன் 23, 2011 10:18 AM
தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்கள்" வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக பள்ளிகளை பொறுத்தவரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை பொறுத்தவரை முதல் மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளை பொறுத்தவரை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 2ம் ஆண்டு மாணவ, மாணவிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, 4ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் படிப்படியாக லேப்டாப்கள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் விபரங்களை அரசு சேகரித்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் குறித்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் புள்ளி விபர பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் மாவட்ட வாரியாக இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். தொடர்ந்து மாநில அளவில் இப்பட்டியல் தொகுக்கப்படும். தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இம்மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டம் துவக்கப்படும்.
இந்த லேப்டாப்களை தரமானதாகவும், மானிட்டர், டிவிடி ரைட்டர், வயர்லெஸ், ஹார்ட் டிஸ்க், கேமிரா உட்பட பல்வேறு வசதிகளுடன், அதிக திறன் கொண்டதாக இருக்கும் வகையில் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
