பொறியியல் படிக்க பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பம்
பொறியியல் படிக்க பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பம்
UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 10:42 AM
பொறியியல் படிப்பிற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 109 மாணவர்களில், 70 ஆயிரத்து 519 பேர் (49.27%), பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
குறைந்தபட்சமாக, எஸ்.டி., பிரிவின் கீழ், வெறும் 481 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர்.
பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பித்ததில், 5,246 விண்ணப்பங்கள் தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 109 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டுள்ளன. இவர்களில், அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து, 70 ஆயிரத்து 519 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் சதவீதம் 49.27. பொதுக்கல்வி பிரிவில், 68 ஆயிரத்து, 121 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 2,398 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.கல்வி, வேலைவாய்ப்பில், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை கணக்கிடும்போது, 42 ஆயிரத்து 932 பேர் என்ற அளவை விட, கூடுதலாக 19.27 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் இருக்கின்றனர். இந்த பிரிவில், 35 ஆயிரத்து 889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பங்களில், 25 சதவீதத்தை இவர்கள் பிடித்துள்ளனர். இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விட, கூடுதலாக 5 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முற்பட்ட வகுப்பினர் பிரிவில், 6.70 சதவீதம் (9,601) பேரும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், 4.60 சதவீதம் பேரும் (6,585) விண்ணப்பித்துள்ளனர். கடைசி இடத்தில், எஸ்.டி., பிரிவினர் இருக்கின்றனர். இந்த பிரிவில், வெறும் 481 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். எஸ்.டி., பிரிவினருக்கு 1 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அளவைவிட மிகக் குறைவாக 0.33 சதவீதம் பேர் மட்டுமே, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் பிரிவில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 12.52 சதவீதமாக உள்ளது. இது, இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விட (18 சதவீதம்) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில், விண்ணப்பித்த மாணவர்களில், மாணவர்களின் பங்கு 59.83 சதவீதமாகவும், மாணவியரின் பங்கு 40.16 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்கள் 85 ஆயிரத்து 635 பேரும், மாணவியர் 57 ஆயிரத்து 474 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இதேபோல், சிறப்பு பிரிவிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகமாக உள்ளனர். மொத்தம் உள்ள 5,675 பேரில், 2,718 பேர் பி.சி., பிரிவினர்.
