UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM
ADDED : ஜூன் 27, 2011 02:07 PM
ஆண்டுதோறும் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கல்லூரியில் காலடி வைக்கின்றனர். இளநிலை, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மூன்று, நான்கு ஆண்டுகள் அவர்களின் வாழ்வின் முக்கிய காலகட்டம்.
மாணவர்கள் இந்த காலகட்டத்தில் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். கல்லூரி வாழ்க்கையை கேளிக்கையாக மட்டும் போக்காமல் எதிர்காலத்துக்கான திட்டமிடுதலுடன் நோக்குவது அவசியம். முதல் முறையாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்காக...
* உங்களின் லட்சியம் என்ன?
முதலில் என்ன படிப்பில் சேர வேண்டும், எந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவர்கள் கூறும் பாடத்தை தேர்வு செய்யக் கூடாது. தங்களது லட்சியம், கனவு ஆகியவற்றை எடுத்துக் கூறி தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேரலாம்.
* லட்சியத்துடன் கனவு காணுங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கான லட்சியத்துடனேயே எப்போதும் இருங்கள். உங்கள் மனதில் லட்சியத்துக்கான நெருப்பு எரிந்து கொண்டே இருக்கட்டும்.
* சரியான பாதையை தேர்வு செய்யுங்கள் தங்களின் லட்சியத்துக்கான சரியான பாதையை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். கல்லூரி வாழ்வில் வீணாக பொழுதைக் கழிக்காமல், உங்களது உள்மனம் கூறும் பாதையை தைரியமாக தேர்வு செய்யுங்கள்.
* சிந்தித்து செயல்படுங்கள் எந்த செயலையும் செய்யும் முன் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்லூரி வாழ்வில் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். மகிழ்ச்சியுடன் பொழுது போக்குவது மட்டுமல்ல கல்லூரி வாழ்வு. எதிர்காலத்துக்கான அடிப்படையும் அதுதான். இதனால் சிந்தித்து செயல்பட்டு கல்லூரி வாழ்க்கையில் சாதித்தால் வாழ்க்கையிலும் சாதிக்கலாம்.
