லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 12:09 PM
இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் விவரங்கள், வகுப்பு வாரியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வரும் செப்., 15 முதல், மாணவர்களுக்கான இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் துவக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இன்னும் இரண்டரை மாதங்களே இருப்பதால், எவ்வளவு லேப்-டாப் தேவை என்பது தொடர்பான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. லேப்-டாப் தயாரிக்க முன்வந்துள்ள நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என, பட்டியல் கொடுக்குமாறு, மாவட்ட கல்வித் துறையிடம், பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் கேட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் என பிரிவு வாரியாகவும், வகுப்பு வாரியாகவும் மாணவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், கல்லூரிகளிலும், பிரிவு வாரியாக, இளங்கலை, முதுகலை பாடப்பிரிவு மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்னும் முழுமையாக முடியவில்லை. எனவே, பிளஸ் 1 மாணவர்களின் தகவல் கேட்கப்படவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டுடன் பள்ளி படிப்பு முடிந்து விடும். எனவே, பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களை பற்றிய தகவல் தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
