UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM
ADDED : ஜூன் 30, 2011 10:10 AM
தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
2011-12ம் கல்வியாண்டின், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குனரக வளாகத்தில் இன்று துவங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
சிறப்பு பிரிவின் கீழ் மொத்தம் 1,118 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், தகுதியின் அடிப்படையில், விளையாட்டு வீரர்கள் மூன்று பேர், மாற்றுத் திறனாளிகள் 66 பேர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 15 பேர், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை துவங்கி வரும் 6ம் தேதி வரை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. இப்பிரிவில் மொத்தம் 20 ஆயிரத்து 769 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 20 ஆயிரத்து 123 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "அரசின் துரித நடவடிக்கை மூலம், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், தங்களின் அரசு ஒதுக்கீடு இடங்களை வழங்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம், இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ள இடங்களில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும்" என்றார்.
