UPDATED : ஜூலை 06, 2011 12:00 AM
ADDED : ஜூலை 06, 2011 10:43 AM
அரசுப் பள்ளிகளில், வரும் 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை, ஆறு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, தினம் ஒரு மணி நேரம், மனவளக்கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் மனம் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்த, வேதாத்திரி மகரிஷியால் வடிவமைக்கப்பட்ட மனவளக்கலை யோகா கல்வியை, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை, தினமும் ஒரு மணி நேரம், மாணவியருக்கு, பெண் பயிற்றுனரும், மாணவர்களுக்கு ஆண் பயிற்றுனரும் பயிற்சியளிக்கவும், பயிற்றுனர்களுக்கு தினமும், 150 ரூபாய் படியாக வழங்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த மண்டல சமுதாய சேவா சங்க பொறுப்பாளர்களை அணுகி, தலைமை ஆசிரியர்கள், பயிற்றுனர்களை ஏற்பாடு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
