UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM
ADDED : ஜூலை 07, 2011 12:15 PM
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வெழுதி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், இன்னும் பணிநியமன ஆணை கிடைக்கப்பெறாமல் வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2009, டிசம்பரில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1300 இடங்களுக்கான பணியாளர் நியமன தேர்வு நடத்துவதாக அறிவித்தது. முனிசிபாலிட்டி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு மூலம் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இத்தேர்வு 2010, ஏப்ரலில் நடந்தது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2800 பேருக்கு 2011, ஜனவரியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டோர் குறித்த பட்டியல் 2011, ஏப்ரலில் வெளியிடப்பட்டது. அதன்பின் இன்று வரை பணிநியமன ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் தேர்வில் பங்கேற்றோர் வேதனையில் உள்ளனர். கடந்த மார்ச் 1 முதல் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்தல் விதிமுறைகள் மே 16க்குப் பின் தளர்த்தப்பட்டன. அதன் பின் 2 மாதங்களாகியும் நியமன உத்தரவு இல்லாதது வேதனைக்குரியதே. இதற்கிடையில் கடந்த 2010, ஜூலையில் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வும் விரைவில் நடக்க உள்ளது. எனவே தங்கள் நிலை கேள்விக் குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் முதலில் தேர்வு எழுதியவர்கள் உள்ளனர்.
