UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM
ADDED : ஜூலை 20, 2011 10:08 AM
ஒன்பதரை லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்த வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், செவ்வாய்கிழமை வெளியானது. தேர்வு செய்யப்பட்ட, 3,484 தேர்வர்களின் பதிவெண்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியின் இறுதி கால கட்டத்தில், 3,484 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர்.
பத்து லட்சத்து, 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்ததில், ஆய்வுக்குப்பின், 9 லட்சத்து, 51 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 20ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வை நடத்தியது.
மாநிலம் முழுவதும், 300 மையங்களில், போட்டித்தேர்வுகள் நடந்தன. இதன் முடிவுகள், கடந்த மாதம் வெளியாகும் என, தேர்வர்கள் எதிர்பார்த்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடியாததால், கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்நிலையில், நான்கு மாதங்களுக்குப் பின், டி.என்.பி.எஸ்.சி., தன் இணையதளத்தில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது.
தேர்வு முடிவு வெளியான தகவல் பரவியதும், முடிவை அறிய பலரும் இன்டர்நெட் மையங்களை முற்றுகையிட்டனர். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் (www.tnpsc.gov.in, தேர்வு செய்யப்பட்ட, 3,484 பேரின் தேர்வு எண்களை வெளியிட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களில், யாராவது பணியில் சேரவில்லை எனில், அந்த இடங்களை நிரப்புவதற்கு வசதியாக, காத்திருப்போர் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
