சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க முடியாது-உச்ச நீதிமன்றம்
சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க முடியாது-உச்ச நீதிமன்றம்
UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM
ADDED : ஜூலை 22, 2011 10:09 AM
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால், 2011-12ம் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வித் தரம் உயராது என்று வாதாடினர். ஆனால், சமச்சீர் கல்வியின் தரத்தில் குறைவில்லை. இன்னும் காலதாமதமானால், மாணவ, மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்தரப்பில் வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
கடந்த திங்கள் கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 22ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதற்கு, பாடப்புத்தகங்கள் வழங்க கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்று, உச்ச நீதிமன்றம், பாடப் புத்தகங்களை ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் வழங்குமாறு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், இந்த மேல் முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஜுலை 26ம் தேதி எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் சமச்சீர் கல்வி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிபுணர் குழு அமைத்து சமச்சீர் கல்வியை ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் அறிக்கையை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
