UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM
ADDED : ஜூலை 22, 2011 02:29 PM
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் வெகிகிள்ஸ் மற்றும் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்காக வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை நடத்தப்படுகிறது.
நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி பதவிக்கு தகுதிவாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னையில் உள்ள மாருதி கார் விற்பனைக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தற்போது 100 விற்பனை நிர்வாகிகள் வரை நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் ரூபாய் 8000 மற்றும் ஊக்க தொகை சம்பளமாக வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பிறகு அவர்களது செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாதம் ரூபாய் 10000- மற்றும் ஊக்க தொகை வழங்கப்படும். சென்னையில் தங்கும் இடம் கம்பெனி செலவிலேயே ஏற்பாடு செய்து தரப்படும். முன் அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத பட்டதாரி ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விருப்பமுடையோர் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தங்கள் சுயதகவல் பதிவேடு, 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் அவர்களது புகைப்பட அடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும் என பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குநர் ரோசரிமேரி கேட்டுக்கொண்டுள்ளார்.
