UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM
ADDED : ஜூலை 28, 2011 11:08 AM
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இயன்முறை மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது; மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 440 மாணவ, மாணவியருக்கு இயன்முறை மருத்துவ முறையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
15 இயன்முறை மருத்துவர்கள், மாணவ, மாணவியரை பரிசோதித்தனர். உடல் அமைப்பு, எடை, உயரம், கை, கால், உடல் இயக்கம் உள்ளிட்டவற்றை தனித்தனியாக பரிசோதனை செய்தனர். பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு தட்டை பாதம், கூன் விழுதல், முட்டி முட்டுதல், விரல் வளைந்திருத்தல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. சில மாணவர்கள், சராசரிக்கும் குறைவான உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
440 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 420 மாணவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாணவர்கள் மட்டுமே முழு உடல் தகுதியுடன் உள்ளனர். திருப்பூர் மாவட்ட முகாம் கண்காணிப்பாளரான, இயன்முறை டாக்டர் சத்யமூர்த்தி கூறுகையில், "200 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் மட்டுமே முழு உடல் தகுதியுடன் இருக்கின்றனர். பார்வைக்கு ஆரோக்கியமாக தெரிந்தாலும், ஏதேனும் ஒரு குறைபாடு அவர்களது உடலில் இருக்கிறது. சிறு வயதில் இவர்களுக்கு இருக்கும் பிரச்னை, பருவ வயதில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். 60 வயதில் வரக்கூடிய மூட்டுத்தேய்மானம், இடுப்பு வலி உள்ளிட்ட நோய்கள், இவர்களுக்கு 30 வயதில் வரும். பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும், சத்தாண ஆகாரங்களை உட்கொள்ளாததும் இதற்கு காரணம். இப்போது, மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து வருகிறோம். தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் இதேபோல் முகாம் நடத்தப்பட்டு, கணக்கெடுக்கப்படும்,&'&' என்றார்.
அனைவருக்கும் கல்வித்திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் கூறுகையில், "மாணவர்களுக்கு உடலில் குறைபாடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தர வேண்டும்," என்றார். முகாம் நடத்தி, குழந்தைகளுக்கான பாதிப்புகளை கண்டறிவதுடன் நிறுத்தி விடாமல், அவர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க தேவையான பயிற்சிகளை கற்றுத்தரவும் அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதுடன், பெற்றோருக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
