UPDATED : செப் 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: வேலைக்கு செல்லும் பெற்றோரில், குழந்தைகளுக்காக தந்தைமார்கள் செலவிடும் நேரம் மிகவும் குறைந்து வருவதாக, அசோசெம் நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது.
ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:
அலுவலகத்தில் இருந்து திரும்பிய பின், குழந்தைகளின் வீட்டுப்பாடங்கள், படிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் கூறியுள்ள தந்தைகள் வெறும் 4 சதவீதம் மட்டுமே. மற்றவர்கள், தங்களுக்கு அலுவலகத்திலேயே நேரம் போதவில்லை என்று காரணம் கூறுகின்றனர்.
வேலைக்கு செல்லும் தந்தைகளில் 96 சதவீதம் பேர்களில், எப்போதாவது தங்களின் குழந்தைகளுக்கு உதவுவதாக 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகள் கேட்டால் மட்டுமே உதவுவதாக 24 சதவீதத்தினரும், எப்போதுமே வீட்டுப்பாடங்களில் உதவுவதில்லை என்று 65 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், வேலைக்கு செல்லும் பெண்களில் 83 சதவீதம் பேர் தங்களின் குழந்தைகளின் பள்ளி பாடங்களில் அக்கறை செலுத்துகின்றனர். தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் நேரம் ஒதுக்குவதாக 20 சதவீதத்தினரும், அவர்களுக்கான பொருட்களை செய்து தருவதாக 79 சதவீதத்தினரும், குழந்தைகளுடன் அமர்ந்து படிப்பதாக 79 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலத்து கல்வி முறை முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், குழந்தைகளின் கல்வியில் தங்களால் பெரியளவில் உதவ முடிவது இல்லை என்று, ஐந்து பெற்றோரில் இருவர் கருத்து கூறியுள்ளனர். சிலர், தங்களின் குழந்தைகளுக்கு உள்ள பாடப்பிரிவுகளை இதற்கு முன் அறிந்ததே இல்லை என்றும் கூறியுள்ளனர்.
தனியாக வசிக்கும் தாயுடனும், தனியாக வசிக்கும் தந்தையுடனும் வளரும் குழந்தைகள் பள்ளி நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வம் காட்டுவோராக உள்ளனர்.