தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் 26 மாவட்டங்கள்!

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் 26 மாவட்டங்கள்!

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் 26 மாவட்டங்கள்!


UPDATED : செப் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டிலுள்ள கல்வியில் பின்தங்கிய 374 மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகள் அமைக்க, இரண்டாயிரத்து 992 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தின் 30 மாவட்டங்களில், 26 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியவையாக கணக்கிடப்பட்டிருப்பதால், 26 மாதிரி கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், மாதிரி கல்லூரிகளை அமைக்க, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான குழுவை, பல்கலை மானியக் குழு அமைத்தது.
இக்குழு நடத்திய ஆய்வில், ஒரு மாவட்டத்தின் மொத்த மாணவர்களில், கல்லூரியில் சேர்வோர் எண்ணிக்கை, தேசிய சராசரி அடிப்படையில், 12.4 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பின், அந்த மாவட்டம் பின் தங்கியதாகக் கணக்கிடப்பட்டது. அதன்படி, இந்தியாவின் 593 மாவட்டங்களில், 374 மாவட் டங்கள், கல்வியில் பின்தங்கியவையாக கண்டறியப்பட்டன.
இந்த மாவட்டங்களில், மாதிரி கல்லூரிகளை உருவாக்க இக்குழு பரிந்துரைத்தது.
ஆந்திராவில் 11, அருணாசல பிரதேசத்தில் 11, அசாமில் 12, பீகாரில் 25, சட்டீஸ்கரில் 15, குஜராத்தில் 20, அரியானாவில் 7, இமாசல பிரதேசத்தில் 4, ஜம்மு-காஷ்மீரில் 11, ஜார்க்கண்டில் 12, கர்நாடகாவில் 20, கேரளாவில் 4, மத்திய பிரதேசத்தில் 39, மகாராஷ்டிராவில் 7, மேகாலயாவில் 5, மிசோரத்தில் 6, நாகாலாந்தில் 2, ஒரிசாவில் 18, பஞ்சாப்பில் 13, ராஜஸ்தானில் 30, சிக்கிமில் 4, தமிழகத்தில் 26, திரிபுராவில் 4, உத்தர பிரதேசத்தில் 41, உத்தரகண்டில் 2, மேற்கு வங்கத்தில் 17, அந்தமான் நிகோபரில் 2, தாதர், நாகர் ஹவேலி 1, டாமன், டையூ 2, லட்சத்தீவு 1, புதுச்சேரி 1 என, கல்வியில் பின்தங்கிய 374 மாவட்டங்களிலும் 374 மாதிரி கல்லூரிகள் அமைய உள்ளன.
தமிழகத்தில் 30 மாவட்டங்களில், கல்லூரியில் சேரும் மாணவர் எண்ணிக்கை சதவீதம் 3.1 முதல் 6 வரை, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 6.1 முதல் 9 வரை திருவாரூர், தர்மபுரி, வேலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், அரியலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், கரூர், கடலூர் ஆகிய 13 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
9.1 முதல் 12.4 வரை கோவை, நீலகிரி, சேலம், சிவகங்கை, காஞ்சிபுரம், ஈரோடு, பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
‘இந்த 374 மாவட்டங்களில் 374 மாதிரி கல்லூரிகளை துவக்க, ஒரு கல்லூரிக்கு எட்டு கோடி ரூபாய் வீதம், இரண்டாயிரத்து 992 கோடி ரூபாய் முதலீட்டு செலவாகவும், கல்லூரிக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வீதம் 561 கோடி ரூபாய் ஆண்டுதோறும் தொடர் செலவாகவும் தேவைப்படும்.
ஆண்டு தொடர் செலவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் மற்றும் வாடகைக்கும், 50 லட்சம் ரூபாய் கல்லூரியை நடத்துவது மற்றும் பராமரிப்பிற்கும் செலவிடப்படும்.
‘முதலீட்டு செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். மாநில அரசு, கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான இடத்தை வழங்கும். ஆண்டுதோறும் தேவைப்படும் தொடர் செலவை, பல்கலைக் கழகங்கள் மூலமாக மாநில அரசு எதிர்கொள்ள வேண்டும்’ என, குழு தெரிவித்துள்ளது.
குழு தலைவர் தியாகராஜன் கூறுகையில், “10 கி.மீ., தொலைவில் எந்தக் கல்லூரியும் இல்லாத இடங்களில் இம்மாதிரி கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இதனால், கிராமப்புற, மலைப் பகுதி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதிரி கல்லூரிகள், அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்.
ஆனால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப பாடத் திட்டங்களை வகுத்துக்கொள்ளும் சுதந்திரம் இம்மாதிரி கல்லூரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இம்மாதிரி கல்லூரிகள் எப்போது செயல்பட துவங்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்யும்,” என்றார்.
உயர்கல்வித்துறை செயலர் கணேசன் கூறுகையில், “சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, கல்வியில் சிறந்த விளங்குகிறது. ஆனால், கோவையை, கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக குறிப்பிட்டிருக்கின்றனர். எந்த அடிப்படையில் பின்தங்கிய மாவட்டமாக கணக்கிடுகிறீர்கள் என கேட்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் தலா ஒரு கல்லூரி வீதம், 30 மாதிரி கல்லூரி துவங்க அனுமதி வழங்குமாறும் கேட்டோம்,” என்றார்.
கணக்கீடு எப்படி?
மக்கள் தொகையில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களில் எவ்வளவு பேர் பிளஸ் 2 படிப்பிற்கு மேல் உயர் கல்வியை தொடர்கின்றனர் என்பதை, சதவீத அடிப்படையில் கணக்கிடுவதே, மொத்த கல்லூரி மாணவர் சேர்க்கை விகிதம் எனக் கூறப்படுகிறது.
பிளஸ் 2 படிப்பிற்கு மேல் உயர்கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கையை, 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கையால் வகுத்து, 100ஆல் பெருக்கி இவ்விகிதம் கணக்கிடப்படுகிறது.
இதன்படி, தேசிய மொத்த கல்லூரி மாணவர் சேர்க்கை விகிதம் 12.4 என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மொத்த கல்லூரி மாணவர் சேர்க்கை விகிதம் கணக்கிடப்பட்டு, அது தேசிய சராசரிக்கு குறைவாக இருந்தால், அம்மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us