‘கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை’: ஸ்ரீசாந்த் பேட்டி
‘கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை’: ஸ்ரீசாந்த் பேட்டி
UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “வாழ்வில் கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை,” என, இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறினார்.
கோவை டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரி, ‘ஸ்கூல் ஆப் காமர்ஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ துறை சார்பில், ‘நேருக்குநேர் நிகழ்ச்சி’ கல்லூரியில் நடந்தது.
இதில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மாணவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:
உங்களது விளையாட்டு வளர்ச்சிக்கு வழிகாட்டி யார்?
இளம் வயதிலிருந்து விளையாட்டில் ஆர்வம் உண்டு. அதை உணர்ந்த என் பெற்றோர், எனக்கு வழிகாட்டி, சிறந்த ஆதரவு அளித்து வந்தனர்.
இந்திய அணியில் சிறந்த பவுலராக விளங்க முடியும் என்று நினைத்தீர்களா?
அனைவருக்கும் ஆசை உண்டு. என்னை பொறுத்தவரை, இளம் வயதிலிருந்து கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன். எனவே, எனது ஆசை நிறைவேறியது. வாழ்வில் கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை.
முதல் 20-20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருப்பது பற்றி...?
எனது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியதில், என் பங்கும் உள்ளதே என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன்.
ஹர்பஜன் சிங் உங்கள் கன்னத்தில் அறைந்தது பற்றி...?
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அண்ணன், தம்பியை அடித்து விட்ட சம்பவமாக கருதுகிறேன்.
விளையாட்டு, விளம்பரம் இரண்டையும் எப்படி கருதுகிறீர்கள்?
இந்திய அணியில் விளையாடுவதால் தான் விளம்பரம் தேடி வருகிறது. சந்தேகமின்றி விளையாட்டுக்கு தான் முக்கியத்துவம்; பிறகு தான், விளம்பரத்துக்கு இடம் அளிக்கிறேன்.
சச்சின் மீது கொண்டுள்ள மரியாதை குறித்து...
தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சினுக்கு, நான் பவுலிங் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற சந்தோஷம். ஆனால், அவரை தவிர எந்த பேட்ஸ்மேனுக்கும் பவுலிங் போடுவதில் அஞ்சவில்லை.
இந்தியா, 50 ஓவர் போட்டியில் உலக கோப்பை பெற வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங், பீல்டிங், பவுலிங் அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. கடின பயிற்சி எடுக்க வேண்டும். அத்துடன் அதிர்ஷ்டமும் கைக்கூடி வந்தால் நிச்சயம் கோப்பை நமக்கே.
விளையாடும் போது அதிக உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறீர்களே...
உணர்ச்சி வசப்படுவது என்பது எனது இயற்கை குணம். குறிப்பாக விளையாடும் போது, நான் தனியே இருப்பதாக எண்ணி யாரையும் கவனிப்பதில்லை.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பற்றி?
ஆண்கள், பெண்கள் அணி என வித்தியாசமின்றி, இந்திய கிரிக்கெட் வாரியம் சமமாக கருதி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவது பெருமை.
மனதில் பட்டதை யாரிடமும் அஞ்சாமல் கூறுவீர்களா?
எப்போதும் எனது மனதுக்கு பட்டதை அஞ்சாமல் யாரிடமும் கூற தயங்க மாட்டேன். குறிப்பாக அடுத்தவரின் மனது வேதனைபடும் படி கூறமாட்டேன். இவ்வாறு, ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
