காலியிடங்களில் பொதுப் பிரிவினரையும் சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காலியிடங்களில் பொதுப் பிரிவினரையும் சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்க்கல்வி நிறுவனங்களில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ‘இப்படி இட ஒதுக்கீடு வழங்கியது சரியே’ என, சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்தது. இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் சில விளக்கங்கள் கோரி, சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்றும் பேராசிரியர் இந்திரேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அர்ஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் செப்.,15ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இதர பிற்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, தகுதியான நபர்கள் கிடைக்காமல் அந்த இடங்கள் காலியாக இருந்தால், அவற்றை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். உயர்க்கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினரை சேர்க்கும் போது, அவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாகக் கொடுத்து தேர்வு செய்ய வேண்டும்’ என, பேராசிரியர் இந்திரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
உயர்க்கல்வி நிறுவனங்களில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின்னும், காலியாக இருக்கும் இடங்களை, பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். இதுதொடர்பான எங்களின் தீர்ப்பில், எந்த விதமான குழப்பமும் வேண்டாம்.
மேலும், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, இந்த கோர்ட் அளித்த தீர்ப்பில் சில விளக்கங்கள் கோரி, பேராசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வரும் 29ம் தேதி மீண்டும் நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
