UPDATED : ஜன 25, 2012 12:00 AM
ADDED : ஜன 25, 2012 05:07 PM
நடப்புக் கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்வதில், ஏற்பட்ட இரண்டு மாத கால தாமதத்தை தவிர்க்க, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, வகுப்பு நேரம் மாலையில் நீட்டிக்கப்பட்டது. துவக்கப் பள்ளிகளிலும், இதே திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
சாதாரண நாட்களில், மாலை 4.10 மணிக்கு முடியும் பள்ளிகள், இப்புதிய திட்டத்தால், 4.40 மணி வரை நடத்தப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவால், கிராமப்புற பள்ளி மாணவர்கள், மாலை வேளைகளில் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மலையோர மாவட்டங்களில் உள்ள, பள்ளி மாணவர்கள் மாலை 6.00 மணிக்குப் பின், இருட்டில் வீடு சென்று சேரும் அவலநிலை ஏற்பட்டது.
இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என, பெற்றோர், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். இதன்படி, மதிய உணவு இடைவேளையில், 1.30 மணி முதல் 2.00 மணி வரை வகுப்பு நடத்த, அனைத்து உதவிக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாலை நேர வகுப்பு ரத்தானதால் மாணவர்கள், பெற்றோர் மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
