பள்ளி வளர்ச்சியில் மேலாண்மை குழுக்களுக்கு முக்கியப் பங்கு: செயலர்
பள்ளி வளர்ச்சியில் மேலாண்மை குழுக்களுக்கு முக்கியப் பங்கு: செயலர்
UPDATED : ஜன 25, 2012 12:00 AM
ADDED : ஜன 25, 2012 12:23 PM
சென்னை: பள்ளிகள் வளர்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், முக்கியப் பங்காற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் வலியுறுத்தினார்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள 5,675 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில், தலா ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி: இந்த குழு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, 17 கோடியே, இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், இரண்டு தலைமை ஆசிரியர்கள் வீதம், 32 மாவட்டங்களில் இருந்து, 64 தலைமை ஆசிரியர்கள், பயிற்சிக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மூலம், அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் சரியா இருக்க வேண்டும்: பயிற்சியை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் பேசியதாவது: பள்ளிகளின் தேவையை பதிவு செய்வதற்காக, உங்களிடம் படிவங்கள் தரப்பட்டுள்ளன. அதில், பள்ளிகளின் தேவையை முழுமையாக பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியது முக்கியம். ஆசிரியர்களின் தேவை குறித்தும், சரியான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்துப் பணிகளிலும், பள்ளி மேலாண்மைக் குழு முக்கிய பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.
