பதவி உயர்வு பட்டியலில் தவறு இருந்தால் சி.இ.ஓ. முழுப் பொறுப்பு: அரசு
பதவி உயர்வு பட்டியலில் தவறு இருந்தால் சி.இ.ஓ. முழுப் பொறுப்பு: அரசு
UPDATED : ஜன 28, 2012 12:00 AM
ADDED : ஜன 28, 2012 03:53 PM
தமிழகத்தில் 1.1.2012 நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ஆசிரியர் உட்பட) சிறுபான்மை பாட மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி ஆசிரிர்கள், சிறப்பாசிரியர்கள் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.98 வரையிலும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2011 வரையிலும் விபரங்களை அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களும் பணி வரன்முறை செய்யப்பட்ட நகல், தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல், தமிழ் மொழி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் நகல், பொதுக் கல்வி மற்றும் தொழிற் கல்வி சான்று நகல், வேறு மாநில பட்டம்/பட்டயம் துறை மதிப்பீடு செய்யப்பட்ட சான்று நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வரும் 21ம் தேதி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 22ம் தேதி, நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வரும் 23ம் தேதி, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 24ம் தேதி இணை இயக்குனரிடம் (பணியாளர் தொகுதி) ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த எந்த ஒரு ஆசிரியர் பெயரும் விடுபடவில்லை என்று அந்தந்த தலைமை ஆசிரியரிடம் சான்று பெற்று இணைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலில் பெயர் விடுபட்டதாக தெரிவித்து ஆசிரியரிடமிருந்து முறையீடு வந்தால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் தமிழ் பாடத்திற்கு 66.66 சதவீதம், பிற பாடங்களுக்கு 50 சதவீதம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். மீதமுள்ள சதவீத பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழகத்தில் 1,880 முதல் 2,000 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
