UPDATED : ஜன 28, 2012 12:00 AM
ADDED : ஜன 28, 2012 11:32 AM
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் ஊர்ப்புற நூலகங்களில் நூலகர்களை உடனே நியமிக்க வேண்டும் என நூலக அறிவியல் பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி பதிவுமூப்பின்படி நிரப்ப கடந்த செப்டம்பரில் முதல்வர் உத்தரவிட்டார். அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி பட்டியல் மாவட்ட நூலக அலுவலகத்திற்கு கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் நேர்முகத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவிஉயர்வு வழங்கும்போது சிக்கல் ஏற்படுவதை தடுக்க ஒரே நாளில் நேர்முகத்தேர்வு நடக்கிறது.
பல மாவட்ட நூலக அலுவலகங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி பட்டியல் 4 மாதங்களாகியும் கிடைக்கவில்லை. இதனால் நேர்முகத்தேர்வு நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நூலகர்கள் நியமிக்கப்படாமல் சில இடங்களில் ஊர்ப்புற நூலகங்கள் மூடிக்கிடக்கிறது. பல இடங்களில் தினக்கூலி ஊழியர்கள் மூலம் ஊர்ப்புற நூலகங்கள் இயங்கி வருகிறது. சில நூலகங்களை கூடுதல் பொறுப்பாக நூலகர்கள் கவனித்து வருகின்றனர்.
இதனால் கிராமங்களில் நூலகங்களை மக்கள் பயன்படுத்த இயலாத நிலையுள்ளது. முறையாக நூலகர் நியமிக்கப்பட்டால்தான் ஊர்ப்புற நூலகங்களை தகுந்த முறையில் பயன்படுத்த முடியும் என மக்கள் கருதுகின்றனர். இதுகுறித்து நூலக அறிவியல் பட்டதாரிகள் கூறும்போது, "தமிழகம் முழுவதும் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்று நூலகங்களில் வேறு பணிகளில் பல ஆண்டுகள் பணியாற்றுபவர்கள், தமிழ் வழியில் நூலகக்கல்வி படித்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசியல், பண பலத்தை புறந்தள்ளி விட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி பதிவுமூப்பின்படி தகுதி உள்ளவர்களுக்கு பணிநியமனம் வழங்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, கல்விஅமைச்சர், பொதுநூலக இயக்குனருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து நூலகத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "கல்விஅமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதுதொடர்பாக அரசாணை வெளியாகும்" என்றனர்.
