தினமலர் செய்தியால் பழைய பள்ளிக் கட்டடங்களுக்கு விமோசனம்
தினமலர் செய்தியால் பழைய பள்ளிக் கட்டடங்களுக்கு விமோசனம்
UPDATED : ஜன 29, 2012 12:00 AM
ADDED : ஜன 29, 2012 11:13 AM
செங்குன்றம்: இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை பார்வையிட்ட கல்வித்துறை அதிகாரிகள், அவற்றை அகற்றி சுற்றுச் சுவர் அமைப்பது குறித்து, மதிப்பீடு தயாரிக்குமாறு உத்தரவிட்டனர்.
சென்னை அருகே, திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில், பலத்த சேதமடைந்து, தேவையற்ற நிலையில், மாணவ, மாணவியரை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், அபாய கட்டடங்களை அகற்றவும், குடிநீர் வசதி இன்றி அவர்கள் தவிப்பது குறித்தும், ஜனவரி 27ம் தேதி தினமலரில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
அதில், சென்னை செங்குன்றம் அடுத்த, வடகரையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் அடங்கும்.
இந்நிலையில், செய்தி எதிரொலியாக, ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் நிர்மலா ஆகியோர், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் மாணவியர் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டனர். அவர்களுடன் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெருமாள் மற்றும் ரவி ஆகியோர் இருந்தனர்.
பள்ளி வளாகத்தில், 13 பழைய அபாய கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்கட்டடங்களை அகற்றி விட்டு, சுற்றுச் சுவர் அமைக்க மதிப்பீடு தயாரிக்கவும், குடிநீர் வசதிகளை செய்யவும், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக, மத்திய சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
