UPDATED : ஜன 29, 2012 12:00 AM
ADDED : ஜன 29, 2012 03:51 PM
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளையும் மேம்படுத்தும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவை மேம்படுத்தும் முயற்சியாக, ராமானுஜம் அருங்காட்சியகம் மற்றும் கணித ஆய்வகம் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டில், வடசென்னை டி.எச்.சாலை மற்றும் ஜோன்ஸ் சாலையிலும் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளிலும், கணித ஆய்வகம் அமைக்கப்பட்டது.
இங்கு செயல்முறைப்படி கணிதம் கற்பிக்கப்படுவதால், மாணவர்களும் ஆர்வமுடன் கணிதம் கற்கின்றனர். இது மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தியுள்ளதால், மற்ற பள்ளிகளிலும் இந்த நடைமுறையைக் கொண்டு வர மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், ஐந்து மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு, 1.92 லட்ச ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு, மொத்தம் 9.60 லட்ச ரூபாய் செலவில் கணித ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
எந்தெந்த பள்ளிகள்
* எம்.எச்.சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* திருவான்மியூர் மேல்நிலைப் பள்ளி
* ராட்லர் தெரு மேல்நிலைப் பள்ளி
இதுகுறித்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "செயல்வழி கணிதம் கற்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது; நினைவாற்றலும் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு மேலும், ஐந்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான தளவாட சாமான்களை, டான்சி நிறுவனம் மூலம் வாங்கப்பட உள்ளது. படிப்படியாக மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ராமானுஜம் அருங்காட்சியகம், கணித ஆய்வகம் அமைக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்,&'&' என்றார்.
