UPDATED : செப் 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்காக நடந்த தேர்வில் ‘லா பேப்பர்-1’ என்ற தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வக்கீல்கள் 18 பேர் தாக்கல் செய்த ரிட் மனு:
நாங்கள் பி.எல்., முடித்து, வக்கீலாக தொழில் செய்கிறோம். பார் கவுன்சிலில் எங்கள் பெயர் பதிவாகியுள்ளதால், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் நீதிபதிகள் (இளநிலைப் பிரிவு) தேர்வு எழுதினோம்.
அதில், ‘லா-1’ என்ற பேப்பருக்கு நடந்த தேர்வில், தவறான பதில்களுக்கு 0.5 மார்க் கழிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புகளிலும், பத்திரிகை விளம்பரங்களிலும், தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பிய தபாலிலும், இது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
எனவே, தேர்வு எழுதியவர்கள் ‘மைனஸ்’ மார்க் வாங்க வாய்ப்புள்ளது. இத்தேர்வு முடிவை வெளியிட அனுமதித்தால், எங்களைப் போன்றவர்கள் நலன் பாதிக்கப்படும். தேர்வு முடிவு வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும். மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்மனு குறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், சட்டத்துறைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
