UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.,), கூடுதல் படிப்புகளுக்கு தேசிய தர நிர்ணயச்சான்று வழங்க, என்.பி.ஏ., குழு செப்., 26ம் தேதி ஆய்வை துவக்குகிறது.
கோவை தடாகம் ரோட்டிலுள்ள ஜி.சி.டி., கல்லூரியில் பி.இ., சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே தேசிய தர நிர்ணயக்குழுவிடம் (என்.பி.ஏ.,) இருந்து தேசிய தர நிர்ணயச்சான்று பெறப்பட்டுள்ளது. இந்த சான்று பெற்று மூன்று ஆண்டுகள் முடிவதையொட்டி, அங்கீகாரம் புதுப்பிக்கப்படவுள்ளது.
தற்போது பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், பி.டெக்.,( ஐ.டி.,), எம்.இ., சிவில் பாடப்பிரிவில் ஸ்டக்சரல், என்விரான்மென்டல், ஜியோ டெக், எம்.இ., மெக்கானிக்கல் பாடப்பிரிவில் மெஷின் டிசைன், தெர்மல் எனர்ஜி, மேனுபேக்சர், எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜி., பாடப்பிரிவில் அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், வி.எல்.ஐ. எஸ்., எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தர நிர்ணயச்சான்று பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் சிங் மற்றும் 15 உறுப்பினர்கள் கொண்ட என்.பி.ஏ., குழு, ஜி.சி.டி., கல்லூரியில் செப்., 26ம் தேதி காலை 10.00 மணிக்கு ஆய்வை துவக்குகிறது. முதல் நாளில் கல்லூரி ஆசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களுடன் குழு கலந்துரையாடுகிறது.
செப்.,27ல் இயற்பியல், வேதியியல், கணிதம், மானிடவியல் துறைகளை ஆய்வு செய்யும் என்.பி.ஏ., குழுவினர், கல்லூரியில் உள்ள நூலகம், மாணவ, மாணவியர் விடுதி மற்றும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., குழுவினரின் செயல்பாடு உள்ளிட்டவைகளையும் பார்வையிடுகின்றனர்.
செப்.,28ம் தேதி கல்லூரி முதல்வர் அண்ணாத்துரை மற்றும் துறைத்தலைவர்களுடன், குழுவினர் ஆலோசனை நடத்துவர். கல்லூரியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன, ஆசிரியர் தரம், கல்வித்தரம் எவ்வாறு உள்ளது என்பது உட்பட பல்வேறு விவாதங்கள் ஆலோசனையின் போது இடம்பெறும்.
