பள்ளிகளுக்கு ஒன்பது இலக்க குறியீட்டு எண்: கல்வித்துறை அறிமுகம்
பள்ளிகளுக்கு ஒன்பது இலக்க குறியீட்டு எண்: கல்வித்துறை அறிமுகம்
UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பொள்ளாச்சி: ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை எளிதாக அடையாளம் காண, தனித்தனியே ஒன்பது இலக்கம் கொண்ட குறியீட்டு எண் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் கடிதப் போக்குவரத்தில் குறியீட்டு எண் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள், மாவட்ட, மாநில அளவில் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு இதற்காக இணையதளம் துவக்கப்பட்டது.
அதில், பள்ளி அமைந்துள்ள பகுதி, படிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தால் பள்ளிகள் பற்றிய முழுத் தகவல்களையும் எளிதாக அறிய முடிகிறது. இதன்மூலமாக, பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம்.
இந்நிலையில், தற்போது ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை எளிதாக அடையாளம் காணும் வகையில், புதிதாக ஒன்பது இலக்கம் கொண்ட குறியீட்டு எண் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
குறியீட்டு எண்ணில் முதல் இரு எண்கள் எந்த மாவட்டம் என்பதையும், அடுத்த இரு எண்கள் எந்த ஒன்றியம் என்பதையும் குறிப்பிடுகின்றன. அடுத்து வரக்கூடிய இரு எண்களை கொண்டு அரசு பள்ளியா, அரசு உதவிபெறும் பள்ளியா அல்லது ஊராட்சி ஒன்றிய பள்ளியா என்பதை தெரிந்து கொள்ளலாம். கடைசியாக உள்ள மூன்று எண்கள் பள்ளியின் பெயரை அடையாளம் காட்டும்.
உதாரணமாக 11 என்ற குறியீட்டு எண் கோவை மாவட்டத்தையும், 13 என்பது பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தையும் குறிப்பிடுகிறது. அதேபோல், ஊராட்சி ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு 001லிருந்து வரிசைமுறைப்படி, மொத்த பள்ளிகளுக்கும் தொடர்ச்சியாக அடையாள எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் பள்ளியின் அனைத்து கடித போக்குவரத்திலும், குறியீட்டு எண் கட்டாயமாக இடம்பெற வேண்டும்; பள்ளியின் முகவரி அடங்கிய ‘ரப்பர் ஸ்டாம்ப்’ முத்திரையில் குறியீட்டு எண்ணையும் குறிப்பிட வேண்டும். இதுதொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
