மதுரை மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பிரிவுகளுக்கு அங்கீகாரம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பிரிவுகளுக்கு அங்கீகாரம்
UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் நீக்கப்பட்ட நியூராலஜி சிறப்பு பிரிவுக்கு இந்திய மருத்துவக் கழகம்(எம்.சி.ஐ.,) மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் இருதய இயல் சிறப்பு பிரிவுக்கும் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
இக்கல்லூரியில் தலா இரு ‘சீட்கள்’ கொண்ட இருதய இயல், நரம்பியல் பிரிவுகளை சமீபத்தில் எந்த முன்னறிவிப்பின்றியும் எம்.சி.ஐ., நீக்கியது. இப்பாடங்களுக்கான பேராசிரியர்களில் சிலர் எம்.சி.ஐ.,யின் அங்கீகாரம் பெறாததே காரணம் என்று கூறப்பட்டது.
அங்கீகாரம் பெறுவதற்காக அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் செலுத்தி ஆய்வுக்கு அழைத்த நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எம்.சி.ஐ., குழு வரவில்லை. எனவே அங்கீகாரம் பெற முடியாமல் போனதாக கல்லூரி நிர்வாகம் கூறியது.
கடந்த மாதம் நடந்த இருதயஇயல் சிறப்பு தேர்வின் போது ஆய்வு செய்ய வருமாறு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதை ஏற்று எம்.சி.ஐ., குழு ஆய்வு செய்து தற்காலிகமாக இப்பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கியது.
தற்போது நியூராலஜி பிரிவுக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அனுமதி இருக்கும். இருதய இயல் சிறப்பு பிரிவுக்கும் ஐந்தாண்டு அனுமதி அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது.
